போலியோ சொட்டு மருந்து போடும்போது, கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வரும் 27-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

47 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டுமருந்து போடும்போது, கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, சொட்டு மருந்து தரும் முன் சோப்பு போட்டு கைகள் கழுவ வேண்டும். கிருமிநாசினி கொண்டு கைகளை தூய்மைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் போலியோ சொட்டுமருந்து போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.