தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகம் முழுவதும் இம்மாதம் தொடக்கம் முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விடக் கூடுதலாகப் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னையில் பெய்யக்கூடிய மழை நீரானது பெரும்பாலும் அடையாறு வழியாகச் சென்று செம்பரம்பாக்கம் ஏரியை அடையும். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் வில்லிவாக்கம் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரிகளில் தொடர்ந்து நீர் நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதனால் நேற்று ஏரியில் இருந்து 2000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 6,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் 2000 கன அடியில் இருந்து இன்று 3000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, செம்பரம்பாக்கம் ஏரி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ”உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பதோ, குறைப்பதோ ஏரிக்கு வரும் நீர்வரத்தைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.