அரசின் மருத்துவ காப்பீடு திட்டங்களில் தகுதியானவர்கள் எளிய முறையில் சேர்ந்து பயன்பெறும் வகையில் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு காப்பீடு திட்டம் தொடர்பாக திருச்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அரசால் செயல்படுத்தப்படும் மருத்துவ காப்பீடு திட்டங்களில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ காப்பீடு குறித்து ஏழை மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த பொதுநல வழக்கானது மதுரைகிளை நீதிபதிகள் மாகாதேவன், சத்தியநாராயணன் பிரசாத் அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் குறித்து வெளிப்படையாக தெளிவாக பாமர மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தி அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், மேலும், அரசின் மருத்துவக்காப்பீட்டு திட்டங்களில் தகுதியான நபர்கள் எளிய முறையில் பயன்பெறும் வகையில் திட்டங்களை வடிவமைத்து அதை செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Ads by