அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. இந்நிலையில், நகை பிரியர்களை மகிழ வைக்கும் வகையில் கடந்த திங்கள்,செவ்வாய் ஆகிய 2 நாட்களாகவே தங்கம் விலை கடுமையாக சரிந்தது. 2 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.856 குறைந்தது. அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை குறைந்ததால் அந்த நாளில் நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அட்சய திருதியைக்கு மறு நாளான நேற்று நகை பிரியர்களை அதிர வைக்கும் வகையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்தது. அதே போல் இன்றும் சென்னையில்  தங்கம் விலை சவரனுக்கு ரூ.448 உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4,864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,912 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து 68.30 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி 68,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.