எஸ்.பி.வேலுமணியுடன் டெண்டர் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்ட கே.சி.பி நிறுவன மேலாண் இயக்குநர் சந்திரபிரகாஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக ஆட்சியில் அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் அதிக அளவில் ஒப்பந்த திட்டப் பணிகள் கொடுக்கப்படுவதாகவும், மற்ற ஒப்பந்த நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதற்கிடையே, அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவுக்கு வந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர், அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி ஊழல்களில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரிடமும், மாநகராட்சி ஆணையரிடமும் சமீபத்தில் புகார் அளித்தார். தவிர, அதிமுக ஆட்சியில் ஒப்பந்தப் பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.1.20 கோடி மோசடி செய்துவிட்டதாக, கோவையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை மாநகர போலீஸில் நேற்று (ஆக. 09) புகார் அளித்து இருந்தார்.

இந்நிலையில், கோவை சுகுணாபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட கோவையில் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று (ஆக. 10) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையைத் தொடர்ந்து, கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் வந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கோவை வடவள்ளியில், டெண்டர் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.பி.வேலுமணியின் நண்பரும், கே.சி.பி. நிறுவன மேலாண் இயக்குநருமான சந்திரபிரகாஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனை நடந்து வருகிறது. அப்போது, நெஞ்சுவலி ஏற்படுவதாகக் கூறியதால், தனியார் மருத்துவமனையில் சந்திரபிரகாஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.