‘கடைசி விவசாயி’ இயக்குநர் மணிகண்டனின் சொந்த ஊருக்குச் சென்று, அவரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கி, தயாரித்துள்ள படம் ‘கடைசி விவசாயி’. இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இப்படம் கடந்த பிப்.12 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த இயக்குநர் மிஷ்கின் தனது யூடியூப் பக்கத்தில் இப்படத்தைப் பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ‘கடைசி விவசாயி’ படத்தின் இயக்குநர் மணிகண்டனின் சொந்த ஊருக்குச் சென்று அவரை சந்தித்து பாராட்டியுள்ளார் இயக்குநர் மிஷ்கின். இது தொடர்பான வீடியோவையும் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பதிவில் மிஷ்கின் கூறியுள்ளதாவது:

கடைசி விவசாயி தந்த மகா கலைஞனான மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்குச் சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த அவனுக்கு நன்றி கூறி, அவன் கரங்களை முத்தமிட்டேன். படத்தின் கதையின் நாயகனாக, ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்குச் சென்று அவர் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன். மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்குச் சென்று மதிய உணவு உண்டோம். இந்த முழு நாளும் ஒரு அற்புத நாளாக மாறியது.

மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்.

இவ்வாறு அப்பதிவில் மிஷ்கின் கூறியுள்ளார்.