கடலூர் எம்.பி. ரமேஷ் ஜாமீன் கோட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மேலமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவித்தராஜ் (55) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி கோவிந்தராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து, காடாம்புலியூர் போலீஸார் மர்ம மரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணைய நடத்தினர். இது குறித்து, பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, சிபிசிஐடி போலீஸார் பனிக்கன்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த கோவிந்தராஜூவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை சிபிசிஐடி போலீஸாருக்குத் தரப்பட்டது.

அதில், கோவிந்தராஜ் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கடந்த 8-ம் தேதி எம்.பி. ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, 9-ம் தேதி அதிகலை எம்.பி. ரமேஷின் முந்திரி தொழிற்சாலையில் பணியில் இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த அல்லாப்பிச்சை, எம்.பியின் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி எம்.பி. ரமேஷ் பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிபதி அவரை 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டர். இதனையடுத்து, அவர் கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் கடந்த 13-ம் தேதி கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி பிரபாகர் தலைமையில் நடந்தது.

ரமேஷ் எம்.பி. தரப்பில் வழக்றிஞர்கள் சிவராஜ், கதிர்வேலன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். கடலூர் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் தீபா, ரமேஷ் எம்.பியை தங்கள் வசம் எடுத்து 2 நாட்கள் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பிரபாகர் சிபிசிஐடி போலீஸார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கடலூர் சிபிசிஐடி எம்.பி. ரமேஷை கடலூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், அன்று மாலை சிபிசிஐடி போலீஸார் எம்.பி. ரமேஷை மீண்டும் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி பிரபாகர் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, போலீஸார் அவரை கடலூர் கிளை சிறையில் அடைந்தனர்.

இந்த நிலையில் இன்று (அக். 20) எம்.பி. ரமேஷுக்கு ஜாமீன் கேட்டு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் சிவராஜ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த ஜாமீன் மனு வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.