தமிழகத்தில் பருவமழைக் காலத்துக்குப் பின்னரே புதிய பாதாளச்சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தற்போது பருவமழை தொடங்க உள்ளதால், மழைநீர் கால்வாய் அமைத்தல், சிறு பாலங்களுக்கு அடியில் உள்ள கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்திள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. முந்தைய ஆண்டுகளில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த் துறைஉள்ளிட்ட துறைகளுடன் இணைந்து நகராட்சி நிர்வாகத் துறை பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. இப்பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் சில பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் சிறுபாலங்களுக்குக் கீழ் படியும் கழிவுகளை அகற்றுவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுஉள்ளது. சென்னையில் தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாலங்களுக்குக் கீழே இயந்திரங்கள் செல்ல முடியாத இடங்களில் கழிவுகளால் பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள மேடுகளை அதற்கான இயந்திரங்களைக் கொண்டுஅகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.

மழைநீர் கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் கண்காணிக்கவும், உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களைச் சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இணைப்பு இல்லாத இடங்களில் உரிய இணைப்பை ஏற்படுத்தி மழைநீர்தடையின்றி செல்ல வழிவகை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. மேலும், தற்போது நடைபெற்றுவரும் மழைநீர் கால்வாய்பணிகளை விரைந்து முடிக்கஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய பணிகளுக்கு மழைக்காலத்துக்குப் பின்னரே ஒப்புதல் அளித்து தொடங்க நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது சென்னை மாநகராட்சியால் 16சுரங்கப்பாதைகள், இதர துறைகளால் சில சுரங்கப்பாதைகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த சுரங்கப்பாதைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே உள்ள மோட்டார் பம்புகளின் திறனை விடக் கூடுதலாக 50 சதவீதம் திறன் கொண்ட பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மழைநீரை பாலங்களிலிருந்து வெளியேற்றினால், அது மீண்டும்பாலத்துக்குள் வராமல் தடுக்க, கால்வாய்களில் திருப்பி விடப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மழை பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.