கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் மற்றும் அந்த ரயில் நிலையத்தில் இருந்து ஆகாய நடைபாதை அமைக்க சென்னை போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பேருந்து நிலையமும் உள்ளது. இந்தப் பேருந்து நிலையம் வரும் ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் நிலையம் மற்றும் ஆகாய நடைபாதை அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யவுள்ளது

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தற்போது சாலை வழியாக மட்டுமே செல்ல முடியும். மின்சார ரயில் கிளாம்பாக்கத்தில் இல்லை. பண்டிகை காலங்களில் அனைவரும் சாலை வழியாக வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்ப உள்ளது. எனவே, இதைத் தடுக்க கிளாம்பாக்கத்தில் ஒரு புறநகர் ரயில் நிலையம் அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி அளிக்க கோரி தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் சாலை வழியாக நடந்து செல்வதை தவிர்க்க, ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு ஒரு ஆகாய நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 400 மீட்டர் நீளத்திற்கு இந்த நடைபாதை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார் செய்யப்படவுள்ளது.