சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. இன்று முதல் 25ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளையும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் மத்திய கிழக்கு, வட கேரளா, தென் கர்நாடகம், அரபிக் கடலின் மத்திய கிழக்கு, தென் மேற்கில் சூறாவளி வீசும். அரபிக்கடலில் தென் மேற்கு பகுதி, வட கேரளம், தென் கர்நாடக கரையோர பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. மே 24ல் வட அந்தமான் கடல், வங்கக்கடலின் தென் மேற்கு, மத்திய கிழக்கு, அரபிக்கடலின் தென் மேற்கில் சூறாவளி வீசும். மே 25ல் வங்கக்கடலின் மத்திய கிழக்கு, அரபிக் கடலின் தென் மேற்கு பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு 5 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளது.