விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாக துருவ் விக்ரம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகான்’. 7 ஸ்கீர்ன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை (பிப்ரவரி 10) அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தில் டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் அனைத்துமே வெளியாகிவிட்டது. மேலும், விளம்பரப்படுத்தப் படக்குழுவினர் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளனர்.

இந்தப் பேட்டியில் விஜய் மகன் சஞ்சய்க்கும் தனக்கும் இடையேயான நட்பு குறித்துப் பேசியுள்ளார் துருவ் விக்ரம். இது தொடர்பாக துருவ் விக்ரம் கூறியிருப்பதாவது:

“சின்ன வயதிலிருந்தே விஜய் சாருடைய மகன் சஞ்சய் எனது நண்பர் தான். அவர் நல்ல கதையுடன் வந்தால், அவர் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். பாலிவுட் மாதிரி இங்கு இரண்டு நாயகர்களின் வாரிசுகள் இணையும் படமாக அது அமையும்.”

இவ்வாறு துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.