பொதுப் போட்டி, ஓ. பி.சி, எஸ்.சி பிரிவினருக்கு ஒரே கட் ஆப் 61.75 இருப்பது எப்படி? பொதுப் போட்டியில் தேர்வான இட ஒதுக்கீட்டு பிரிவினரை இட ஒதுக்கீட்டு கணக்கில் சேர்ப்பது அப்பட்டமான மீறல். என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.ஐ. வங்கி வேலைவாய்ப்பு வழங்குவதில் தொடர்ந்து  இடஒதுக்கீடு நெறியை மீறி வருவதாகவும், இதனை சமூக நீதி அமைச்சகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,  ஸ்டேட் வங்கி துவக்க நிலைத் தேர்வு முடிவுகளில் இட ஒதுக்கீடு நெறி முறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. 2020 ல் இருந்து இந்த பிரச்சினை குறித்து நிதி அமைச்சகம், சமூக நீதி அமைச்சகத்திற்கு கடிதங்கள் அனுப்பி வருகிறேன். அவர்கள் அக்கடிதங்களை ஸ்டேட் வங்கிக்கு அனுப்புவதும் தாங்கள் இட ஒதுக்கீடு நடைமுறையை கடைப்பிடிப்பதாக பதில் தருவதும் வாடிக்கையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘27.11.2020, 11.12.2020, 28.12.2020, 07.01.2021 என வரிசையாக தனது கடிதங்கள், அமைச்சகம், ஸ்டேட் வங்கியின் பதில்களைப் பார்த்தால் அவையே இட ஒதுக்கீடு நெறிகளை அவர்கள் மீறுவதற்கு சாட்சியங்கள் ஆக உள்ளன என்றும் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும் போதும் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்படுவதுமாக உள்ளதாகவும்  அரசும், ஸ்டேட் வங்கியும் மீறல்களை தொடர்கின்றன என்றும் கூறியுள்ள அவர், ஆகவே பிரச்சினையின் வேர் அடையாளம் காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மீண்டும் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதுவதாக தெரிவித்த சு.வெங்கடேசன், “ இந்தக் கடிதம் வழக்கம் போல ஸ்டேட் வங்கிக்கு அனுப்பப்படுவதற்காக அல்ல. குற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா? தற்போதைய முடிவிலும் பொதுப் போட்டி, ஓ. பி.சி, எஸ்.சி பிரிவினருக்கு ஒரே கட் ஆப் 61.75 இருப்பது எப்படி? பொதுப் போட்டியில் தேர்வான இட ஒதுக்கீட்டு பிரிவினரை இட ஒதுக்கீட்டு கணக்கில் சேர்ப்பது அப்பட்டமான மீறல். பொதுப் பட்டியல் கட் ஆப் க்கு அதிகமான மதிப்பெண் பெற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியலிலேயே கணக்கு வைக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு ஸ்டேட் வங்கி பதிலளிக்க வேண்டாம் என்று குறிபிட்டுள்ள அவர், சமூக நீதி அமைச்சகம் இட ஒதுக்கீட்டு நெறி முறைகளில் கற்றுத் தேர்ந்த நிபுணர்களை கொண்ட குழுவை அமைத்து விசாரிக்கட்டும். அதில் இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும், சமூக நீதி ஆர்வலர்களும் இடம் பெற வேண்டும்.இப்பிரச்சினையில் தீர்வு காணப்படும் வரையில் எனது முயற்சிகள் தொடரும். நாடாளுமன்றத்திலும் இதற்கான குரல் கேட்கும்” என்று தெரிவித்துள்ளார்.