கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72,071 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15,967 பேரும்  போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில்  போட்டியிட மொத்தம் 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் கிராம ஊராட்சித் தலைவர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது.

வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களான காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,வேலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 97,831 பேர் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72,071 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15,967 பேரும்  போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,676 பேரும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,122 பேரும் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது, வரும் 25-ஆம் தேதி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் ஆகும்.  அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.