முழு ஊரடங்கின்போது சென்னையில் தேவையின்றி இயக்கப்பட்ட 929 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை தளர்வுகளற்ற முழு ஊரடங்கும் அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து கண்காணிப்பை போலீஸார் அதிகப்படுத்தியுள்ளனர். 10 ஆயிரம் போலீஸார் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி, நேற்று முன்தினம் சென்னையில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியதாக 643 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 877 இருசக்கர வாகனங்கள், 27 ஆட்டோக்கள் மற்றும் 25 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 929 வாகனங்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், முகக்கவசம் அணியாதது தொடர்பாக 3,947 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.7 லட்சத்து 89,400 அபராதமும் சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 40 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு ரூ.20 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டன. பொதுமக்கள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கும்படி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.