தருவைகுளம் கடற்கரைப் பகுதியில் மாநில அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சில் ஆட்சியர் பேசியதாவது:

கடலோரப் மாவட்டங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து, அவர்களுக்குப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காக, கடற்கரை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, 2021-22-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான போட்டிகள் தருவைகுளத்தில் 2 நாட்கள் நடக்கின்றன.

அந்தந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கின்றன. இவ்வாறு, 10 மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு ஆட்சியர் கூறினார்.