ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு என அறிவித்த கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று முன் தினம்  கமல்ஹாசனை சந்தித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவு கோரியிருந்த நிலையில் செயற்குழு கூட்டத்தை கூட்டி முடிவை அறிவிப்பதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.  

இந்நிலையில்,  இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு என அறிவித்த கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.      

‘நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான இளங்கோவனுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதிமன்ற கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.