பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனித் திருவிழா தொடங்கியது.

தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகன உலா, சூரிய வட்டம், சந்திரவட்டம், அதிகார நந்தி காட்சியளித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வானதேரோட்டம் கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். அதேபோல, மற்றொரு முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர்உலா கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பங்குனித் திருவிழாவின் கடைசி நிகழ்வான கபாலீஸ்வரர் – கற்பகாம்பாள் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று மாலை6 மணிக்கு புன்னை மரத்தடியில் உமாதேவி, மயில் உருவில் மாதேவரை வழிபடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, உமாதேவிக்கு சிவன் காட்சியளித்தார். இரவு கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், கரோனா வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தினர்.