தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 26-ம்தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. பரவல் சற்றுகுறைந்துள்ள நிலையில், இன்று முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது.

இது திரைத் துறையினர், திரையரங்க உரிமையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஒரு மாதத்தில், ‘கொம்புவச்ச சிங்கம்டா’, ‘சினம்’, ‘கோடியில் ஒருவன்’, ‘டாணா காரன்’, ‘ஜெயில்’ உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட படங்களை திரையரங்குகள் மூலம் வெளியிட திட்டமிட்டு படக் குழுவினர் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். இதில், பல சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாக உள்ளன. இதனால், சிறிய பட்ஜெட் படங்களைதயாரித்த தயாரிப்பாளர்கள் பலரும் உத்வேகத்துடன் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.