கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் நெறிமுறைகளை பின்பற்றி சென்னையில் புறநகர் மின்சார ரயில்களின் சேவை குறைக்கப்பட்டது. அதுபோல, பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, 2 தவணை தடுப்பூசி கட்டாயம் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

இதற்கிடையே, கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், தமிழக அரசு மேலும் பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்றுமுதல் முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னையின் அனைத்து வழித் தடங்களிலும் இன்று (பிப். 14) முதல் முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. புதிய கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அலுவலக நாட்களில் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் 254, கும்மிடிப்பூண்டி 84, சென்னை கடற்கரை – வேளச்சேரி 80, செங்கல்பட்டு தடத்தில் 240 என மொத்தம் 658 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.