சென்னை: டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மே 31-க்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா பாசனத்துக்கான நீரை மேட்டூர் அணையில் இருந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் 3 நாட்களில் கல்லணையை வந்து சேரும். கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். கல்லணையில் திறந்து விடப்பட்ட நாளில் இருந்து 10 நாட்களில் கடைமடையை தண்ணீர் சென்று சேரும் என்று எதிர்பார்க்ப்படுகிறது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மே 31-க்குள் முடிக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் 23.04.2022 அன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 4,964 கி.மீ. தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதுவரை 4,047 கி.மீ. நீளத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ளது. 82 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இதில் ஆறுகள் தூர்வாரும் பணி முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தினசரி 210 கி.மீ. நீளத்திற்கு போர்க்கால அடிப்படையில் கூடுதல் இயங்திரங்களை பயன்படுத்தி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆறுகள் வாய்க்கால்களுக்கு தண்ணீர் சென்றடைவதற்கு முன் மீதமுள்ள பணிகள் அனைத்தும் 31.05.2022-ற்குள் முழுமையாக முடிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்