அரசு சேமிப்பு திட்டமான செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி சேமிப்பவர்கள் கவனத்திற்கு.. இந்த திட்டத்தின் வட்டி விகிதம் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைக்கான சிறு சேமிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தை பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாகவும், வருமானம் ஈட்டும் முதலீடு அல்லது பெண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு ஒரு முதலீடாகவும் நீங்கள் கருதலாம்.சமீப காலமாக இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அதிகளவில் முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது. அரசு சார்ப்பில் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வும் மேற்கொள்ளப்படுகிறது. போஸ்ட் ஆபீஸ், பொதுத்துறை வங்கியின் மூலம் இந்த திட்டத்தில் இணையலாம்.

இந்நிலையில், வரும் ஜூலை மாதம் முதல் இந்த திட்டத்தில் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. ppf,nsc, ssy இந்த திட்டத்தின் வட்டி விகிதங்கள் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று நம்பப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெப்போ விகிதத்தை மீண்டும் 0.50 சதவீதம் உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்த பிறகு, இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூன் இறுதிக்குள் அதிகரிக்கப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில்ரிசர்வ் வங்கிவெளியிட்ட அறிவிப்பின் படி ரெப்போ விகிதத்தை ஒரு மாதத்தில் 90 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதனால் அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என தெரிகிறது. வரும் ஜூலை 1 முதல், ​​பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு, என்எஸ்சி ஆகிய அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020-21 முதல் காலாண்டில் இருந்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஏப்ரல் 1, 2022 முதல் தொடங்கி ஜூன் 30, 2022-ல் நிறைவடையும். நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கான இந்த சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிடும் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும்.