இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினியைத் தெளிப்பான்கள் மூலம் பீய்ச்சிடித்துள்ளது கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கையில் கரோனா தடுப்பு என்ற பெயரில் கிருமிநாசினியை இலங்கை சுகாதாரத்துறையினர் தெளிப்பான்கள் மூலம் பீய்ச்சியடித்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இத்தகைய மனித உரிமை மீறல் கண்டிக்கத்தக்கது!

மனிதர்கள் மீது கிருமி நாசினியைத் தெளிப்பது மிகக் கொடுமையான பக்கவிளைவுகளையும், நோய்களையும் ஏற்படுத்தும். அது அவர்களின் உரிமைகளை மீறிய, அவமதிக்கும் வகையிலான செயல் என்று உலக சுகாதாரம் நிறுவனம் கூறியுள்ளது. அதை மீறிய இலங்கை மீது நடவடிக்கை தேவை!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மைக்கேல் என்ற 53 வயது மீனவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இனியும் தாமதிக்காமல் இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்!” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.