‘விக்ரம்’ படம் தனது ஏற்படுத்திய தாக்கம் குறித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் குறித்து பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கார்த்தி ‘விக்ரம்’ படம் குறித்த தனது அனுபவத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ”அனைவரும் குறிப்பிட்டது போல் ‘விக்ரம்’ திரைப்படம் கமல்ஹாசனின் உண்மையான கொண்டாட்டம். அவரை திரையில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது. ஆக்‌ஷனும் காட்சியமைப்பும் சுவாரசியமான இணைப்புகள் மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருந்தது.

பஹத் பாசில் தனது தீவிரமான நடிப்பை ஒருபோதும் கைவிடவில்லை. விஜய் சேதுபதி நெகட்டிவ் கதாபாத்திரத்தின் புதிய நிழலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அனிருத் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஆபத்தான காட்சிகளை இன்னும் பெரியதாகவும், மீட்பவர்களை சக்திவாய்ந்தவர்களாகவும் மாற்றியிருக்கிறார். இறுதியாக… ரோலக்ஸ் சாரை பார்ப்பதற்கு பயமாக இருந்தார். லோகேஷ் உங்கள் ரசிக மனப்பான்மையை முழுமையாக பார்வையாளர்களுக்கு கடத்திவிட்டீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.