மார்ச் 31-ஆம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ”மார்ச் 31-ஆம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைகள் திரும்பத் தரப்படும். 14.4 லட்சம் பேரின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 5 சவரனுக்கு உட்பட்ட நகைகள் திரும்பத் தரப்படும்.

போலி ஆவணம், போலி நகைகள் மூலம் பணம் பெற்றவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியுள்ள நபர்கள் விடுப்பட்டிருந்தால் அவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் பரீசிலனை செய்யப்பட்டு, அவர்களுக்கு நகைகள் தள்ளுபடி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

தமிழக பொது பட்ஜெட் தாக்கல் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணியளவில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், நகைக் கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொது பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.