புதிய கல்வி கொள்கைகளின்படி, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆரோக்கியத்திற்கு தேவையான சத்தான உணவு வழங்குவதோடு அதனை கண்காணிக்கவும் வலியுறுத்துப்படுகிறது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளை கணிணி மயமாக்கி டிஜிட்டல் முறையில் கற்றுக்கொள்வதற்கு வசதியாக மேம்பாடு செய்வதற்கும், பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளையும் மேம்படுத்தி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டு, மதிய உணவில் நவ தானியங்களையும், கருப்பட்டி,வேர்க்கடலை,வாழைப்பழம் போன்ற சத்தான உணவுகளை மதிய உணவு திட்டத்தில் சேர்ப்பதற்கு வேண்டிய முயற்சிகளை செய்து கொடுத்து ஆலோசனையும், அறிவுரையும், வழிகாட்டுதலும் வழங்கினேன்.

புதிய கல்விக்கொள்கைகளின்படி மாணவர்களுக்கு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அவர்களது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்தான உணவுகளை வழங்குவதோடு அதை கண்காணிப்பதும் வலியுறுத்தப்படுகிறது.

வருகின்ற 2023ம் ஆண்டை நவதானியங்கள் ஆண்டாக உலக உணவு விவசாய அமைப்பு உலக நாடுகளுடன் கொண்டாட இருக்கின்றது. அதை முன்னின்று நடத்துவதற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் இந்நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.”

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.