சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியாகும். இன்று காலை நிலவரப்படி ஏரியில் தண்ணீர் இருப்பு 23.48 அடியாக உள்ளது.

எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு அளவான 23 அடியை தாண்டியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படவுள்ளது. இதன்படி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, அடையாறு ஆகிய பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.