சென்னை: கடப்பாக்கம் ஏரியை சீரமைக்க தேவையான ரூ.55 கோடி நிதியை உலக சுற்றுச்சூழல் நிறுவனம் வழங்கவுள்ளது.

கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதியில் ரூ.2,518 கோடி செலவில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணியானது ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 16-வது வார்டில் கடப்பாக்கம் ஏரி சீரமைக்கப்படவுள்ளது. 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை சென்னையின் சுற்றுசூழல் பூங்காவாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்த ஏரி புரனமைக்கப்பட்டு ஏரியைச் சுற்றி நடைபாதை, சைக்கிள் பாதை, புதிய நுழைவு வாயில், பூங்கா, வாகன நிறுத்துமிடம், சிறுவர் விளையாட்டுத் திடல், சூரிய மின்விளக்குகள் அமைத்தல், செயற்கை நீருற்று ஆகியவை அமைக்கப்படவுள்ளது. மேலும், தூர்வாரும் பணிகள் மூலம் ஏரியில் 0.3 – 0.35 டி.எம்.சி. கொள்ளளவு தண்ணீரை தேக்க முடியும்.

இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு உலக சுற்றுச்சூழல் நிறுவனம் நிதியுதவி அளிக்க உள்ளது.

உலக சுற்றுச்சூழல் நிறுவனம் (global environment facility) காலநிலை மாற்றம் தொடர்பான பல திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இதன்படி கடப்பாக்கம் ஏரியை சீரமைக்கும் திட்டத்திற்கு இந்த நிறுவனம் நிதியுதவி அளிக்கவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்திற்கு தேவையான 100 வல்லுநர்களை சென்னை மாநகராட்சி விரைவில் தேர்வு செய்ய உள்ளது.