தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ எனும் ஏற்றுமதி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (செப். 22) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து ‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்’ நிகழ்வினை இந்திய சுதந்திர தின விழாவின் 75-வது வருடத்தை முன்னிட்டு நடத்துகின்றன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ ஏற்றுமதி மாநாட்டைத் தொடங்கவும் மற்றும் விழா பேருரையாற்றவும் இசைவு அளித்துள்ளார். உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக தொடக்க விழா, கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் ஆகியவை அமையவுள்ளன. கண்காட்சியில் பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் தமது பொருட்களைக் காட்சிப்படுத்த உள்ளன. இக்கண்காட்சி பொது மக்களுக்காக செப்டம்பர் 22, 2021 அன்று மாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை திறந்து இருக்கும்.

தொடக்க விழாவில் முதல்வர் ’தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை’ மற்றும் ’குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு’ ஆகியவற்றை வெளியிடுவார். இந்நிகழ்வில் பல ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட உள்ளன”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.