கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்பை தொடக்கம் முதல் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக திட்ட அறிக்கையை (DPR) தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ள நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு இரு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு 1000 கோடி ரூபாய் கர்நாடக அரசு நிதி ஒதுக்கி அதன் பணிகளை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில் ஜூன் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள 16-வது ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை முன் வைக்கப்பட்டது. கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்றுள்ள ஆணையத்தின் தலைவர் நடைபெற உள்ள “காவிரி நீர் மேலாண்மை ஆணைய” கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் புதிய முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க உள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு எதிரானது என்றும் அதே நேரத்தில் மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்கு உரிய அதிகாரம் படைத்த ஆணையம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அல்ல என்றும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கமே உச்சநீதிமன்ற உத்தரவின் படி இரு மாநிலங்களுக்கும் இடையே முறையாக நீர் பங்கீடு செய்வதற்கு மட்டுமே என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘கர்ப்ப காலத்தின் முக்கிய பரிசோதனைகள்’

கர்நாடக அரசு தரப்பில் காவிரி ஆற்றிலிருந்து “லிப்ட் இரிகேஷன்” முறையில் நீரை விவசாயத்திற்காக பயன்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அது குறித்து தமிழக அரசு விவாதிக்க வேண்டுமென முந்தைய கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் அது ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் இப்போது “மேகதாது அணை” தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்க கோரிய மனு ஏற்றுக் கொண்டிருப்பது ஏற்கமுடியாத ஒன்று எனவும் உச்சநீதிமன்ற முந்தைய உத்தரவுக்கு எதிரானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் அந்தத் திட்டம் தொடர்பாகவும் விவாதிக்கவோ அல்லது விவாதித்து ஒரு உத்தரவு பிறப்பிக்கவோ தடைவிதிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.