சென்னை: சென்னை திருவெற்றியூரில் ஆன்லைனில் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணி கெட்டுப்போன நிலையில் இருந்ததால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் வாடிக்கையாளர் புகார் அளித்தார். சென்னை திருவெற்றியூர் பகுதியில் வசிப்பவர் ஹரிஹரன். இவர் ஆன்லைன் மூலமாக, தனியார் சிக்கன் பிரியாணி கடையில், சிக்கன் பிரியாணியும், சிக்கன் லாலிபாப்பும் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சிறிது நேரத்தில் உணவு டெலிவரி செய்யப்பட்டது. இந்நிலையில், ஆர்டர் செய்த பிரியாணி கெட்டுப்போனதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிக்கன் லாலிபாப்பும் துர்நாற்றம் வீசியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிஹரன், சம்பந்தப்பட்ட தனியார் அசைவ உணவகமான ss ஹைதராபாத் பிரியாணி என்ற உணவகத்தின் நிர்வாகத்திடம் நேரடியாக சென்று விளக்கம் கேட்டுள்ளார். நிர்வாகத்தினரும், வேறு பிரியாணி தருவதாக கூயியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரன், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக புகார் அளித்தார். மேலும், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய பிறகே இதன் முழு விவரம் தெரியவரும் என கூறப்படுகிறது. இருப்பினும், இதுதொடர்பாக ஹரிஹரன், அருகில் உள்ள திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.