ஓடிடியில் வெளியிட்டிருந்தால் இந்த அளவுக்குப் பாராட்டுகள் வந்திருக்காது என்று ‘சுல்தான்’ பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தி தெரிவித்தார்.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, நெப்போலியன், லால், ராஷ்மிகா மந்தனா, பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் மே 2-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூல் ரீதியாக இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இதனைத் தொடர்ந்து ‘சுல்தான்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்கள். இதில் இந்தி படப்பிடிப்பில் இருந்ததால் ராஷ்மிகா கலந்து கொள்ளவில்லை. அவர் தவிர்த்து மீதி அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கார்த்தி பேசியதாவது:

” ‘சுல்தான்’ படத்தைப் பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையைக் கேட்கும்போது நான் 10 வயதுச் சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் கடா மாதிரி ஒரு பாத்திரம். அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர். இதுபோக, 100 அடியாள்கள். என்னைப் பாதுகாப்பதுதான் அவர்களின் வேலை. எப்போதும் என்னைச் சுற்றியே இருப்பார்கள் என்று கேட்கும்போது கற்பனைக் கதை போலத் தோன்றியது. அனைவரும் அதை விரும்புவோம்.

லால் சார் கண்டிப்பாக இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் தெரிவித்தார். அவர் கூறியதைப் போல லால் சார் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். மயில்சாமியின் நகைச்சுவையை நான் மிமிக்ரி செய்ய முயற்சி செய்யும் அளவிற்கு அளப்பரியதாக இருக்கும். அதேபோல, யாருக்கு என்ன தேவையோ அதைக் கடன் வாங்கியாவது செய்யக் கூடியவர். எம்.ஜி.ஆரின் குணத்தைப் பின்பற்றி வருகிறார். காமராஜ், சென்றாயன் என ஒவ்வொருவரும் நன்றாக நடித்தனர்.

பாடல்களிலும் கதையைக் கூறி யாரையும் எழுந்து போகவிடாமல் இசையமைத்த இசையமைப்பாளர்களுக்கு நன்றி. அர்ஜெயின் ‘தலையா’ கதாபாத்திரத்தை அனைவரும் ரசிக்கிறார்கள். இப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு ஓவியம். அதை வடிவமைத்த பெருமை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனையே சேரும்.

இப்படத்தைக் குடும்பத்துடன் வந்து திரையரங்கில் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். குழந்தைகள் ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்வதாக என்னிடம் தொடர்புகொண்டு பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும், இது திரையரங்கிற்கான படம். அதற்காக 3 வருடங்கள் பொறுமையாக இருந்து வெளியிட்ட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி. ஓடிடியில் இப்படத்தை வெளியிட்டிருந்தால் இந்த அளவு பாராட்டுகள் வந்திருக்காது.

அதேபோல், பாதுகாப்போடு ஒரு திரைப்படத்தைத் திரையரங்கில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”.

இவ்வாறு கார்த்தி பேசினார்.