கடலூர்: கடலூரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து 4 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய கோயில் தீட்சிதர்கள் தடைவிதித்தனர். இதற்கு பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடராஜர் கோயில் கணக்குகள், நகைகள் இருப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வந்த இந்து சமய அறநிலைய அதிகாரிகள் குழுவுக்கு கோயில் தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தராததால் அக்குழுவினர் திரும்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து சிதம்பரம் சபாநாயகர் (நடராஜர்) கோயில் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் கடலூரிலுள்ள இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் 20 மற்றும் 21-ம் தேதியில் நடைபெறும், அப்போது மக்கள் மனு அளிக்கலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

சென்னை இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், வேலூர் இணை ஆணையர் லட்சுமணன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், விசாரணைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதி, கடலூர் இணை ஆணையர் அசோக்குமார் ஆகியோரைக் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

கடலூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை குழு அதிகாரிகளிடம் தெய்வத் தமிழ் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மனு அளித்தனர்.

இதுபோல பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மனு அளித்தனர். நேரடியாக 650 மனுக்கள் அளிக்கப்பட்டுஉள்ளதாகவும், மெயில் மூலமாக3,461 மனுக்கள் அளிக்கப்பட்டுஉள்ளதாகவும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இன்று (ஜூன்.21) மாலை 3 மணி வரையிலும் மனு அளிக்கலாம் என்றும் ஆன்லைனில் vocud.hrce@tn.gov.in என்ற முகவரியில் கருத்து தெரிவிக்கலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்