எனக்கான பெருமைகள் அனைத்தும் என் பெற்றோர்களுக்கே போய்ச் சேரவேண்டும். அவர்களைப் போன்ற பெற்றோர் எனக்கு அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா எனத் தெரியவில்லை என்று சிம்பு நெகிழ்ச்சியுடன் பேசினார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவர் சிலம்பரசன். சிறுவயது முதல் தமிழ் சினிமாவில் நடித்துவரும் சிம்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக சில தினங்களுக்கு முன் வேல்ஸ் பல்கலைக்கழகம்அறிவித்தது. அதன்படி, இன்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தலைமையில் நடந்த விழாவில் சிம்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பட்டம் வாங்கியபின் தந்தை டி.ராஜேந்தர் மற்றும் தாயிடம் சிம்பு ஆசிர்வாதம் வாங்கினார். இந்தப் புகைப்படங்கள், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனிடையே, டாக்டர் பட்டம் பெற்றபின் பேட்டியளித்த சிம்பு, “இந்தப் பட்டம் எனக்கு உரித்தானது அல்ல. எனது இந்த நிலைக்கு முழுக் காரணம் எனது தந்தையும் தாயும்தான். சினிமாவில் நான் இந்த அளவுக்கு உயர்ந்தது அவர்களால்தான். 9 மாதக் குழந்தையில் இருந்து என்னை இந்தப் பயணத்தில் இணைத்து அவர்கள்தான். எனவே இந்தப் பெருமைகள் அனைத்தும் அவர்களுக்கே போய்ச் சேரவேண்டும். அவர்களைப் போன்ற பெற்றோர் எனக்கு அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா எனத் தெரியவில்லை. இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாகப் பேசிய வேல்ஸ் பல்கலைக்கழகம் நிறுவனர் ஐசரி கணேஷ், “சிம்பு இன்று முதல் டாக்டர் சிம்பு என அழைக்கப்படுவார். கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் கலைத்துறைக்குப் பலவித சேவை செய்துள்ளார் சிம்பு. ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே நடிக்கத் தொடங்கியவர். இன்னும் அவரின் பயணம் தொடர்கிறது. 50 படங்களைத் தற்போது நெருங்கி வருகிறார். திரைத்துறையில் பன்முகம் கொண்ட கலைஞராகத் திகழ்வதால் அவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமை கொள்கிறேன். சிம்புவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்” என்று தெரிவித்துளளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்தப் படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். இதில் ராதிகா சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிலம்பரசனுக்கு நாயகியாக கயடு லோஹர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.