தஞ்சை பெரிய கோயிலான பிரகதீஸ்வரர் கோயிலின் கட்டிடக் கலையின் சிறப்புகளை வியந்து பேசும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா. இந்நிலையில், அவரை பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்குமாறு நெட்டிசன் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா. அவரது சோஷியல் மீடியா ஷேரிங் அனைத்தும் அமளி துமளி ரகங்களாக இருக்கும். கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு வாழ்த்துவது, சமயங்களில் அதனை வடிவமைத்தவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் அவரது வழக்கம். அதோடு நின்று விடாமல் கவனம் ஈர்க்கும் வகையிலான பதிவுகளையும் பகிர்வார்.

அந்த வகையில் இப்போது தஞ்சை பெரிய கோயிலின் கட்டிடக் கலையின் புகழை பாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இண்டீரியர் டிசைனரான ஸ்ரவண்யா ராவ் பிட்டி, தஞ்சை பெரிய கோயிலுக்கு நேரடியாக சென்று அதன் கட்டிடக் கலையின் சிறப்பு குறித்து விளக்குகிறார்.

“11-ம் நூற்றாண்டில் கட்டிய சோழர் கோயிலான பிரகதீஸ்வரர் கோயிலில் நாம் உள்ளோம். ராஜ ராஜ சோழன் கட்டிய கோயில் இது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக இந்த கோயில் விளங்குகிறது. எந்தவித இயந்திரமும் இல்லாத அந்த காலத்தில் இந்தக் கோயிலை ஆறு கிலோ மீட்டருக்கு சாய்வு தளம் அமைத்து கோயில் கோபுரத்தை கட்டியுள்ளார். படம் வரைந்து அதன் அடிப்படையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. பேரண்டத்தின் இடது வலது குறித்து இந்த கோவில் பேசுகிறது. ஆறு பூகம்பங்களை தாங்கி நிற்கிறது” என ஸ்ரவண்யா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

“ஸ்ரவண்யா வழங்கியுள்ள அற்புதமான தகவல்கள் அடங்கிய வீடியோ கிளிப் இது. சோழப் பேரரசின் சாதனை மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றத்தை நாம் சரிவர உள்வாங்கவில்லை என நினைக்கிறேன். இதன் வரலாற்று சிறப்பு நாம் உலகிற்கு உரக்க சொல்லவில்லை” என ஆனந்த் மஹிந்திரா அந்த ட்வீட்டின் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். அவரது வீடியோவை கவனித்த நெட்டிசன்கள் பலரும் வெவ்வேறு வகையிலான கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். “சார், சோழ சாம்ராஜ்யம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்கவும். அது நம் பெருமை” என பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.