சந்தேகத்திற்கிடமான சில நிதி பரிவர்த்தனைகள் மற்றும் ஆர்யன் கானுடன் வாட்ஸ்அப் விவாதங்கள் தொடர்பாக 3-வது நாள் விசாரணைக்கு நடிகை அனன்யா பாண்டே இன்று ஆஜராகவில்லை.

மும்பை அருகே சொகுசு கப்பலில் போதை பொருள் பார்ட்டி நடத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டனர். மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஆர்யன் கான் உள்ளார். கப்பலில் கைது செய்யப்பட்ட நபர்களில் சிலருடன் வாட்ஸ் ஆப்பில் போதை பொருட்கள் குறித்தும், அதை வாங்குவது குறித்தும் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஆர்யன் கானுக்கு போதை மருந்து விநியோகஸ்தர்களின் எண்களை வழங்கி 3 முறை மருந்துகளை வழங்க உதவியதாக வாட்ஸ் சாட் உரையாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் 2 முறை ஆஜரான அனன்யா, தான் எப்போதும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியது இல்லை என்றும் வாட்ஸ்-அப்பில் போதைப் பொருட்கள் குறித்து தான் பேசியது வெறும் ஜோக்குக்காக மட்டுமே என்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்த்துள்ளார்.

இந்தநிலையில் 3-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகுமாறு போதைப்பொருட்கள் தடுப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனு்பபி இருந்தனர். ஆனால் அனன்யா பாண்டே இன்று ஆஜராகவில்லை.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மனுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரியுள்ளார். இன்று அவர் வந்திருந்தால், ஒரு வாரத்திற்குள் இது மூன்றாவது முறையாக இருந்திருக்கும்.

ஆர்யன் கானின் தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வாட்ஸ்அப் பேச்சின் அடிப்படையில் அவர் முதலில் அழைக்கப்பட்டார்.