“ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் குறித்து இறுதி விசாரணை அறிக்கையில்,சிறுமியிடம் இருந்து கரு முட்டைகள் பலமுறை எடுக்கப்பட்டிருக்கும் தகவல், அதிர்ச்சியளிக்கிறது” என்று மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் குறித்து இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ப்பட்டுள்ளது. அதன்படி, சினை முட்டை தானம் கொடுத்த சிறுமியின் உண்மையான வயது 16 என்றும், அவரது உண்மையான பெயர் மற்றும் வயது மறைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது தெரியவருகிறது.

அதேபோல், சினை முட்டை தானத்திற்கு, சிறுமியை அவரது குடும்பத்தினரே நிர்பந்தித்து, அதில் ஈடுபட்டது தெரியவருகிறது. ஆதார் அட்டை போலியாக தயாரிக்கப்பட்டது என்று தெரிந்தும் இடைத்தரகர், பெற்றோர் மற்றும் 6 மருத்துவமனைகள் அதனை தவறாக பயன்படுத்தியது தெரியவருகிறது.

விசாரணை அடிப்படையில், ஈரோடு சுதா மருத்துவமனை, சேலம் சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை,திருவனந்தபுரம் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனை, திருப்பதி மத்ருதுவா டெஸ்ட் ட்யூப் பேபி சென்டர் ஆகிய 6 மருத்துவமனைகள் முறையே ஏஆர்டி சட்டம் (Assisted Reproductive Act-2021) , ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்கள் மற்றும் PCP NDT Act சட்டப்பிரிவுகள் மற்றும், TamilNadu Clinical Establishment Act ஆகிய சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை மீறி, செயல்பட்டது தெரியவருகிறது.

இந்த விசாரணையில், சிறுமியிடம் இருந்து சினை முட்டைகள் பலமுறை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது அதிரிச்சியான தகவல். ஒரே சிறுமியிடம் மாதந்தோறும் என்ற அடிப்படையில், சினை முட்டையை எடுத்துள்ளனர்.

இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள 4 மருத்துவமனைகள் மீது நீதிமன்றத்தில், சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இணை இயக்குநர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள இரு மருத்துவமனைகள் மீது, நடவடிக்கை எடுக்க அந்தந்த மாநில அரசுகளுக்கு மருத்துவத்துறை செயலாளர் மூலம் பரிந்துரை அனுப்பப்படுகிறது.

PCP NDT சட்டத்தின்படி, மேற்கூரிய மருத்துவமனைகள் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டது நிரூபணமாகியுள்ளது. எனவே இந்த மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டர்கள் சட்டப்பிரிவை மீறி செயல்பட்டுள்ளதால், அவைகளை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.

ஈரோடு சுதா மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை ஆகியவை தற்போது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளாக செயல்படுகின்றன. விசாரணை அறிக்கை அடிப்படையில், இந்த இரண்டு மருத்துவமனைகளும், இத்திட்டத்திலிருந்து உடனடியாக நீக்க உத்தரவிடப்படுகிறது. நீதிமன்ற ஆணையின்படி சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. TamilNadu Clinical Establishment Act-ன்படி மருத்துவமனைகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

இன்றுமுதல் 15 நாட்களுக்குள் மேற்கூறிய 4 மருத்துவமனைகளிலும் இருக்கிற, உள்நோயாளிகளை உடனடியாக சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். பின்னர், உரிய சட்ட விதிமுறைகளின்படி, அந்த மருத்துவமனைகளை நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் மருத்துவதுறை சார்பில் மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார்.