சென்னை: “நம் தலைமுறையே முன்னேறுவதற்கான அச்சாரமாக கல்வி அமைந்திருக்கிறது. அதனால்தான், மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, கொளத்தூர், கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கல்லூரியில் பயிலும் 685 மாணவ,ப் மாணவியர்களுக்கு கல்வி கட்டணம் ரூ. 10,000 மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கிடும் அடையாளமாக 20 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “எத்தனையோ போராட்டத்துக்கு பிறகு நமக்கு இந்தப் படிப்பு கிடைத்திருக்கிறது. இந்தக் கல்விதான் நாம் மட்டுமில்லை, நம்முடைய தலைமுறையே முன்னேறுவதற்கான இது அச்சாரமாக அமைந்திருக்கிறது. அதனால்தான், நீங்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும், குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

பசியில் வாடாமல் இருப்பதற்குதான், காலையில் பள்ளிக்கு வந்தவுடன், காலை உணவுத் திட்டம். மாணவிகள், பள்ளி, கல்லூரி, வேலைகளுக்குப் செல்ல, நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம். உங்களில் பல பேர் இந்தப் பயணத்தால், மாதம் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தி, அதை கல்விச் செலவுகளுக்குப் பயன்படுத்தி இருப்பீர்கள் என்று நான் மனதார நம்புகிறேன்.