இதுவரை விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மட்டும் பரவி வந்த H3N8 பறவை காய்ச்சல் சீனாவின் ஹினான் மாகாணத்தில் ஒரு சிறுவனருக்கும் பரவி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2002-ம் ஆண்டு H3N8 பறவைக்காய்ச்சல் தொற்று வட அமெரிக்காவில் வாழும் நீர் பறவைகளில் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

இந்த கிருமி பறவைகள், குதிரைகள்,, நாய்கள், மற்றும் சீல்களை பாதிப்பதாக அறியப்பட்டபோது மனிதர்களுக்கு இதுவரை பரவியதாக தகவல் இல்லை. இந்நிலையில் சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு H3N8 பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்:
ஏப்ரல் 5-ம் தேதி காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் H3N8 பறவைக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் கோழிகள் மூலம் சிறுவனுக்கு தொற்று பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சிறுவனின் உறவினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறியிருக்கும் சீன மருத்துவர்கள் H3N8 கிருமி மக்கள் மத்தியில் பரவும் அபாயம் குறைவாகவே இருப்பதாக கூறியிருக்கின்றனர். இதுவரை பறவைகள் மற்றும் விலங்குகளிடம் மட்டுமே கண்டறியப்பட்ட H3N8 பறவைக்காய்ச்சல் சீனாவில் மனிதர்களுக்கு பரவ தொடங்கி இருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.