‘அயன்’ சினிமாபட பாணியில் வயிற்றுக்குள் ரூ.6.58 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை மறைத்து கடத்த முயன்ற உகாண்டா நாட்டைச் சேர்ந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

சென்னை வெளிநாட்டில் இருந்து பெருமளவு போதைப்பொருட்கள் விமானத்தில் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அதிகாலை 4:45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது உகாண்டா நாட்டைச் சேர்ந்த எள்ளி ஜேம்ஸ் ஓப்பிள் (27) என்ற இளைஞர் சுற்றுலாப்பயணி விசாவில், உகாண்டாவில் இருந்து சார்ஜா வழியாக சென்னைக்கு வந்தார். அவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அப்போது அவர், முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனையிட்டனர். பின்னர், அவரை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் கேப்ஸ்யூல் மாத்திரைகளை விழுங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு இனிமா கொடுத்து, அவர் வயிற்றில் மறைந்து வைத்திருந்த கேப்ஸ்யூல்களை 2 நாட்களாக வெளியே எடுத்தனர். மொத்தம் 80 கேப்சல்கள் இருந்தன. அந்த கேப்ஸ்யூல்களை உடைத்து பார்த்தபோது, அதனுள் ஹெராயின் என்ற போதைப்பொருள் மறைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மொத்தம் 940 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது. இதன் சா்வதேச மதிப்பு ரூபாய் 6.58 கோடி.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் உகாண்டாவைச் சேர்ந்த இளைஞரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சர்வதேச போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சென்னையில் யாருக்கு இந்த போதைப் பொருளைக் கொடுக்க வந்தார். சென்னையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் யார்? என்று சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே போல் வயிற்றுக்குள் கேப்ஸ்யூல்களில் போதைப் பொருள் கடத்தி வந்த உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவரை மத்திய போதை தடுப்புப் பிரிவு போலீஸார் சென்னை நகரில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.