தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அல்லாமல், வேறு வழக்கில் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தை தண்டனைக் காலமாக கணக்கில் எடுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கு ஒன்றில் கடலூர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிவராமன் என்பவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேறு இரு வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர், நான்கு மாதங்களுக்கு மேல் விசாரணைக் கைதியாக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். இரு வழக்குகளில் ஒரு வழக்கில் விடுதலையும் செய்யப்பட்டார்.

இந்நிலையில், சிவராமன் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும்படி 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறையில் இருந்த காலத்தை கணக்கில் எடுக்க வேண்டும் என்றால், தண்டனை விதிக்கப்பட்ட குறிப்பிட்ட வழக்கில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தால் மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்புக்ளை மேற்கோள்காட்டி, 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்

மேலும், தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அல்லாமல் வேறு வழக்கில் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட காலத்தை கணக்கில் எடுக்க முடியாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.