தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையின் கீழ் இயங்கும் வார் ரூமில் இருந்து தரக்குறைவான தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், இதுகுறித்து காவல் துறை விசாரணை செய்ய வேண்டும் என்றும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கீழ், வார் ரூமில் அருவெறுக்கத்தக்க தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகிறோம். எனவே, தமிழக காவல் துறை இதுதொடர்பாக விசாரணை செய்ய வேண்டும். பெண்கள் குறித்து தரக்குறைவான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராமை கட்சியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.