நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பத்து போட்டிகள் இனிதே நடந்து முடிந்துள்ளது. இந்த முறை பத்து அணிகள் களத்தில் விளையாடி வருகின்றன. லீக் போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 4 மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

அதிக ரன்கள், அதிக பவுண்டரி, அதிக சிக்ஸர், அதிக விக்கெட், சிறந்த பவுலிங் எக்கானமி, சிறந்த ஸ்ட்ரைக் ரேட், சிறந்த பேட்டிங் ஆவரேஜ், அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பவுலர், அதிக டாட் பால் வீசிய பவுலர், கவனம் ஈர்த்த இளம் வீரர்கள் என இந்த பத்து போட்டிகளிலும் முத்திரை பதித்த வீரர்கள் குறித்து பார்க்கலாம். மேலும் இதுவரையில் சிறந்த கேப்டன்சி திறனை வெளிப்படுத்திய அணித்தலைவன், சிறந்த அணி குறித்த விவரத்தையும் பார்க்கலாம்.

இது பேட்டிங் சிறப்பு!

2022 ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட சீசனின் காஸ்ட்லி பிளேயரான இஷான் கிஷன், விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் மொத்தம் 135 ரன்கள் சேர்த்துள்ளார். இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார் அவர். அதிக பவுண்டரி விளாசிய வீரராகவும் அவர் உள்ளார். மொத்தம் 16 பவுண்டரிகளை பதிவு செய்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மொத்தம் 11 பவுண்டரிகள் பதிவு செய்திருந்தார் இஷான். சிறந்த பேட்டிங் ஆவரேஜ் கொண்டுள்ள வீரராகவும் அவர் உள்ளார்.

பேட்டிக்கை பொறுத்த வரையில் கொல்கத்தா வீரர் ரஸ்ஸல், அதிக சிக்ஸர் விளாசிய வீரராக உள்ளார். அவர் மொத்தம் 11 சிக்ஸர்கள் பறக்க விட்டுள்ளார். ராஜஸ்தான் வீரர் பட்லர் இந்த சீஸனின் முதல் சதத்தை விளாசியுள்ளார். லக்னோ வீரர் எவின் லூயிஸ் அதிவேக அரைசதம் பதிவு செய்துள்ளார். 23 பந்துகளில் அவர் 55 ரன்கள் சேர்த்தார். 14 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்த ஹைதராபாத் வீரர் வாஷிங்டன் சுந்தர் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரராக உள்ளார்.

இது பவுலிங் சிறப்பு!

முதல் பத்து போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக வீறு நடை போட்டு வருகிறார் கொல்கத்தா அணியின் பவுலர் உமேஷ் யாதவ். 3 போட்டிகளில் 12 ஓவர்களை வீசியுள்ள அவர் மொத்தம் 59 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி மாஸ் காட்டியிருந்தார். அதே போல அதிக டாட் பால் (ரன் கொடுக்கப்படாத பந்து) வீசிய பவுலராகவும் அவர் உள்ளார். மொத்தம் 42 டாட் பந்துகளை அவர் வீசியுள்ளார். சிறந்த பவுலிங் ஆவரேஜ் கொண்டுள்ள வீரராகவும் உள்ளார்.

அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பவுலராக ஹர்ஷல் படேல் உள்ளார். கொல்கத்தா வீரர் சுனில் நரைன் சிறந்த பவுலிங் எக்கானமி கொண்ட வீரராக உள்ளார். வனிந்து ஹசரங்கா, உமேஷ் யாதவ் மற்றும் லூக்கி ஃபெர்க்யூசன் ஆகிய பவுலர்கள் அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

சிறந்த கேப்டன்!

கேப்டன் என்றதும் எல்லோருக்கும் தோனியின் பெயர் சட்டென நினைவுக்கு வரலாம். ஆனால் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டார் தோனி. இந்நிலையில் இந்த பத்து போட்டிகளில் சிறந்த கேப்டன்சி திறனை வெளிப்படுத்திய அணித்தலைவனாக கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரை சொல்லலாம். அந்த அணி மூன்று போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பெற்றுள்ளது.

ஆனால் பெங்களூர் அணிக்கு எதிராக 128 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது கொல்கத்தா. அத்தகைய சூழலில் அந்த ஆட்டத்தில் தனது பவுலர்களை கொண்டு எதிரணியை கட்டுப்படுத்த கடுமையாக முயற்சி செய்தார் ஷ்ரேயஸ். அதனால் இறுதி ஓவர் வரை அந்த ஆட்டம் சென்றிருந்தது. களத்தில் வியூகங்களை கன நேரத்தில் கட்டவிழ்த்தார். அனல் பறக்கும் அவரது அணுகுமுறை அந்த ஆட்டத்தை கொல்கத்தா இழந்த போதும் பார்வையாளர்களின் மனதை வென்றிருந்தது.

சிறந்த அணியாக ராஜஸ்தான் அணியை சொல்லலாம். பேட்டிங், பவுலிங் என ரொம்பவே பேலன்ஸ்டு சைடாக அந்த அணி உள்ளது. முக்கியமாக அந்த அணி விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட் செய்து வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இளம் வீரர்கள்!

மும்பை அணியில் திலக் வர்மா, லக்னோ அணியில் ஆயுஷ் பதோனி, டெல்லி அணியில் லலித் யாதவ் மாதிரியான இளம் வீரர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். இளம் வீரர்கள் தான் தங்கள் அணியின் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என ஒரு பேட்டியில் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சொல்லியிருந்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித். அந்த மேஜிக் அனைத்து அணிகளுக்கும் நடக்கட்டும்.

ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இளம் வீரர்களுக்கு சரியான வாய்ப்பை அமைத்துக் கொடுக்கும் களம் என சொல்லலாம். கடந்த காலங்களில் ஐபிஎல் களத்தில் அசத்தி அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் களத்திற்குள் என்ட்ரி கொடுத்த வீரர்களும் உள்ளனர். இப்போதைய இந்திய அணியில் கூட ஐபிஎல் மூலம் என்ட்ரி கொடுத்தவர்கள் உள்ளனர். அதே போல இந்த சீசனிலும் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் சில வீரர்கள் என்ட்ரி கொடுக்க வாய்ப்புள்ளது.

காலம் காலமாக ஐபிஎல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் அணிகளை காட்டிலும் புதிய அணிகள் புள்ளி பட்டியலில் இந்த முதல் பத்து போட்டிகளில் முன்னிலை பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் பிப்ரவரி மாதம் நடந்த மெகா ஏலம் தான்.

இருந்தாலும் இந்த சீசனின் முதல் சுற்றில் இன்னும் 60 போட்டிகள் விளையாட வேண்டியுள்ளது. அந்த 60 ஆட்டங்கள் புள்ளிப் பட்டியலை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். என்ன நடக்கிறது என்பதை காத்திருந்து பார்க்கலாம்.