கவுண்டமணி, யோகிபாபு கூட்டணியில் ‘பழனிச்சாமி வாத்தியார்’ படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலக்கட்டங்களில் தனக்கே உண்டான நகைச்சுவை பாணியின் மூலம் ரசிகர்களிடையே முத்திரை பதித்தவர் நடிகர் கவுண்டமணி. அவர் கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘வாய்மை’ படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து 6 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் அவர் நடிப்பில் இறங்கியுள்ளார்.

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ‘பழனிச்சாமி வாத்தியார்’ படத்தில் நடிக்க நடிகர் கவுண்டமணி ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குநர் செல்வ அன்பரசன் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் கவுண்டமணியுடன், யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தவிர ராதாரவி, சித்ரா லட்சுமணன், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.