இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட  முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, கொழும்புவில் உள்ள அதிபர் செயலகம் முன்பாக போராட்டக்காரர்கள் மீண்டும் குவியத் தொடங்கியுள்ளனர்.

பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் மக்கள் புரட்சியை அடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். இந்நிலையில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கானத் தோ்தல், இன்று  நடைபெற்றது.

முன்னதாக அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்தார்.  இதையடுத்து, இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுனா சார்பில் அனுரா குமார திஸ்சநாயகேவும் போட்டியிட்டனர்.

 

வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகளும் இன்றே அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள  225 எம்பிகளில் 2 பேர் ரகசிய வாக்கெடுப்பை புறக்கணித்தனர். மீதமுள்ள 223 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதில் 4 ஓட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளும்,  டல்லஸ் அழகப்பெருமா 82 வாக்குகளும், அனுரா குமார திஸ்சநாயகே 3 வாக்குகளும் பெற்றனர்.

இதையடுத்து, ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க 6 முறை இருந்துள்ளார். இதேபோல், இடைக்கால அதிபராகவும் தற்போது இருந்து வந்தார். அதிபராக அவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.

ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் செயலகம் நோக்கி போராட்டக்காரர்கள் மீண்டும் கூட தொடங்கியுள்ளனர். அதிபராக ரணிலை ஏற்கமாட்டோம் என்றும் அவர்கள்  அதிபர் மாளிகை முன்பாக கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.