சட்டப்பேரவைத் தேர்தலின்போது நடந்த தகராறு தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுகவினருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கொடுங்கையூர் போலீஸார் சேகர்பாபு உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, கடந்த 2019-ம் ஆண்டு எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், கீழமை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு சேகர்பாபு உள்ளிட்டோர் ஆஜராக விலக்கு அளித்தும், விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.22-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.