சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதை கண்காணிக்க இந்து அறநிலையத் துறை சார்பில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபையில் (சிற்றம்பல மேடை) பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு, கோயில் பொது தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு எதிர்ப்பு பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிலையில் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யதமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை யொடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் கனகசபையில் சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த சில நாட்களாக பக்தர்கள் கனகசபையில் சுவாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்தபல புகார்கள் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் பக்தர்கள் கனகசபை தரிசனம் செய்வதில், எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கண்காணிக்க, இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பணி அலுவலர்கள் நியமனம் செய்து, கடலூர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர்(கூடுதல் பொறுப்பு) ஜோதி நேற்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஒரத்தூர் மார்க்கசகாயீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ராஜ்குமார் சிறப்பு பணி அலுவலராக நேற்று செயல்பட்டார். இன்று (அக்.13) கொஞ்சிக்குப்பம், அய்யனார், விநாயகர், மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் வேல்விழியும், நாளை (அக்.14), ஆய்வர் நரசிங்கப்பெருமாள் ஆகியோர் சிறப்ப பணி அலுவலர்களாக செயல்படு வார்கள். தொடர்ந்து சிறப்பு பணி அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கடலூர் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ஜோதி தெரிவித்தார்.