போக்குவரத்து விதிமீறல் காரணமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 75 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகரில் குற்றங்களை தடுக்கவும், குற்ற வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கவும் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, அவ்வப்போது காவல்துறை, பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, காவல்துறை சார்பில் பல்வேறு அறிவுரைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், நேற்று (ஜன.7) சென்னையில் பெருநகரில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 5,311 இருசக்கர, மூன்று சக்கர, இலகுரக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. இதில் மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 12 வழக்குகளும், முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் இயக்கியது மற்றும் போக்குவரத்து வீதிகளை மீறியது தொடர்பாக 63 வழக்குகளும் என மொத்தம் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 75 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், Vaahan App மூலம் 517 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. இது தவிர Face Recognition Software என்ற முக அடையாளத்தை கொண்டு பழைய குற்றவாளிகள் அடையாளம் காணும் FRS கேமரா மூலம் 3,104 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர்.