சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.6 கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ஜாவில் இருந்து தனியார் விமானம் நேற்று திருச்சிக்கு வந்தது. அதில் பயணம் செய்தவர்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை விமானநிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு பயணி ரூ.48.62 லட்சம் மதிப்பிலான 983 கிராம் தங்க துகள்களை 5 பாக்கெட்டுகளில் மறைத்து கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. அதேபோல மற்றொரு பயணி ரூ.33.06 லட்சம் மதிப்பிலான 668 கிராம் தங்கத்தை உடலுக்குள் மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த சுங்க அதிகாரிகள், அவர்களிடம்இருந்து ரூ.81.68 லட்சம் மதிப்பிலான 1.652 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.