அன்றாடம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பாக 30 நிமிட நிகழ்ச்சியாவது தனியார் டிவி சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியில் நேற்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலர் அபூர்வ சந்திரா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “தொலைக்காட்சி சேனல்களை அப்லிங்க், டவுன்லிங்க் செய்வதற்கான 2022ம் ஆண்டுகான வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய திருத்தங்களால் பூட்டான், வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாள நாட்டு சேனல்கள் இனி இந்தியாவிலிருந்து அப்லிங்க் செய்யலாம். இதுவரை அவர் சிங்கப்பூரில் இருந்து அப்லிங் செய்து கொண்டிருந்தன. புதிய திருத்தங்கள் இந்தியாவை உலக அரங்கில் ஒரு விரும்பத்தக்க அப்லிங் சேவைதளமாக முன்னிறுத்தும்” என்றார்.

சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி: புதிய சட்டத்திருத்தங்களின்படி இந்தியாவில் இருந்து அப்லிங், டவுன்லிங் செய்ய விரும்பும் சேனல்கள் இனி அன்றாடம் 30 நிமிடங்களாவது தேசிய முக்கியத்துவம், சமூக பிரச்சினைகள் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும். இது பொழுதுபோக்கு சேனல்களுக்கும் பொருந்தும். விளையாட்டு சேனல்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியார் சேனல்கள் சரியான ஸ்லாட்டை தேர்வு செய்து அதற்கேற்ப நேரத்தை, நிகழ்ச்சியை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய ஒருங்கிணைப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, கல்வியறிவு பரவல், நலிந்தோருக்கு அதிகாரமளித்தல், தேசிய ஒருங்கிணைப்பு, கலாசாரம், பாரம்பரியம் என 8 முக்கிய பகுதிகள் சார்ந்து நிகழ்ச்சிகளை வழங்கலாம் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

வெளிநாட்டு சேனல்களுக்கு சலுகை: இதுவரை வெளிநாட்டுச் சேனல்கள் இந்தியாவில் இருந்து அப்லிங் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இப்போது புதிய விதிகளின்படி வெளிநாட்டுச் சேனல்கள் இந்தியாவில் டெலிபோர்ட்களை நிறுவ அப்லிங் செய்து இந்தியாவுக்கு வெளியே அதனை டவுன்லோடு செய்யலாம். இதன் மூலம் இந்தியாவுக்கு அந்நியச் செலாவணி கிடைப்பது அதிகரிக்கும். புதிய திருத்தங்கள் இந்தியாவை உலக அரங்கில் ஒரு விரும்பத்தக்க அப்லிங் சேவைதளமாக முன்னிறுத்தும்.

அதேபோல் சேனல்களுக்கு ஒரே ஒரு டெலிபோர்ட் தான் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது. இனி ஒரு சேனல் ஒன்றுக்கும் மேற்பட்ட டெலிபோர்ட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் சேனல்கள் தங்களின் சிக்னல்களை என்க்ரிப்ட் செய்து கொள்வது கட்டாயமாக்கப்படுகிறது. செய்தி சேனல்கள் அல்லாத பிற சேனல்கள் நேரலையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய முன்பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு பல்வேறு திருத்தங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.