நம் அண்டை நாடான நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், கடந்த 26ம் தேதி, அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியுள்ள இந்த பெரும் துயரத்தில், தமிழகத்தில் இருந்து ஆன்மிக யாத்திரை சென்ற 100 பேர் உட்பட, 300க்கும் அதிகமான இந்தியர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
வெள்ளத்தில் மாயமாகி இருக்கும் இந்தியர்கள் 320 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
நேபாள வெள்ளத்தில் மாயமானவர்களில் இதுவரை 84 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 149 இந்தியர்கள் சீனாவை கடந்து நேபாளம் வந்துள்ளனர்; 400 இந்தியர்கள் சீனாவில் பத்திரமாக உள்ளனர்; 320 இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, நேபாளத்தில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 10 டன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானப்படையின் C-130 ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
